ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், மூன்று குழுக்களாக, 60க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால், வனத்தையொட்டிய கிராம மக்களுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வழியாக, ஓசூர் சானமாவு காப்புக்காட்டிற்கு, 40க்கும் மேற்பட்ட யானைகள் சமீபத்தில் இடம் பெயர்ந்தன. நேற்று அதிகாலை அங்கிருந்து தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு அவை சென்றன. அங்கு, வட்டவடிவு பாறை காப்புக்காட்டில், 15 யானைகளும், சூரப்பன் குட்டை வனப்பகுதியில், 25க்கும் மேற்பட்ட யானைகளும், தனித்தனியாக முகாமிட்டுள்ளன. இதுதவிர, கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டாவில் இருந்து வந்த, 20க்கும் மேற்பட்ட யானைகள், நொகனூர் காப்புக்காட்டில் தஞ்சம் அடைந்துள்ளன. மூன்று குழுக்களாக உள்ள யானைகள் கூட்டத்தை, தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குட்டிகளுடன் யானைகள் கூட்டம் உள்ளதால், அவை ஆக்ரோஷமாக காணப்படுகின்றன. அதனால், தேன்கனிக்கோட்டை வனச்சரக சுற்று வட்டார கிராம மக்கள், வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கவோ, ஆடு, மாடுகளை மேய்க்கவோ செல்ல வேண்டாம் என்றும், விவசாய நிலத்துக்கு அதிகாலை நேரத்தில் செல்வதை தவிர்க்கவும், வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE