புதுடில்லி: அடுத்தாண்டு முதல் உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: உடல்நலமே நமது சொத்து என்பதை 2020ம் ஆண்டு நமக்கு பாடம் கற்று கொடுத்துள்ளது. அந்த ஆண்டு, கடும் சவால் நிறைந்ததாக இருந்தது. 2020ம் ஆண்டிற்கு வழியனுப்பும் நேரத்தில், இந்த ஆண்டின் சவால்கள் மற்றும் அடுத்த ஆண்டிற்கான முக்கியத்துவத்தை நமக்கு எடுத்து காட்டியுள்ளது. ஒருவருக்கு உடலில் ஏற்படும் காயமானது, அவரின் வாழ்க்கையையும், குடும்பத்தையும் பாதிக்கிறது.
தற்போது, நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அடுத்தாண்டு முதல், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் அமலுக்கு வருகிறது. உலக சுகாதாரத்தில், முக்கிய மையமாக இந்தியா மாறி வருகிறது. 2021ம் ஆண்டில், சுகாதாரத்தில், இந்தியாவன் பங்கை அதிகரிக்க வேண்டும்.

நமது நாட்டில் வதந்தி வேகமாக பரவும். சிலர், தங்களின் சுயநல லாபத்திற்காகவும், சிலரின் பொறுப்பற்ற தன்மையால் வதந்தி வேகமாக பரவுகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கும் போது, வதந்தி பரவ துவங்கும். சிலர் ஏற்கனவே அதனை துவங்கிவிட்டனர். வதந்திகள் குறித்து கவனமாக இருப்பதுடன், தங்களுக்கு வரும் தகவல்களை உறுதி செய்யாமல், சமூக வலைதளங்களில் பரப்பக்கூடாது என, கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் மக்களை கேட்டு கொள்கிறேன்.
இந்த ஆண்டின் கடைசி நாளில், கொரோனாவுக்கு எதிராக போராடிய லட்சகணக்கான டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், முன்கள பணியாளர்களை நினைவு கூற வேண்டும். தங்களின் கடமையை நிறைவேற்றிய முன்கள பணியாளர்களுக்கு தலை வணங்குகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE