சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காற்றின் திசைவேக மாறுபாடின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

குமரி கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வடகிழக்கு திசையில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜன.,10 வரை வடகிழக்கு திசையில் பலத்த காற்று வீசக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 9 செ.மீ., திண்டிவனம் 7 செ.மீ., செஞ்சி, மரக்காணத்தில் தலா 6 செ.மீ., அளவு மழை பதிவாகியுள்ளது.
சராசரி மழை அளவு அதிகம்

தமிழகத்தில் இந்த 2020ம் ஆண்டில் சராசரி மழை அளவு அதிகமாகவே கிடைத்துள்ளது. இந்தாண்டு 946 மி.மீ மழை கிடைக்க வேண்டிய நிலையில், 984 மி.மீ கிடைத்துள்ளது. இது சராசரியை விட 4 சதவீதம் அதிகம். தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் 342 மி.மீ கிடைக்க வேண்டியது, 421மி.மீ கிடைத்துள்ளது. இது சராசரியை விட 24 சதவீதம் அதிகமாகும். வடகிழக்கு பருவமழையில் 6 சதவீதம் அதிகமாக 477 மி.மீ கிடைத்துள்ளது.
மாவட்ட வாரியாக மழை அளவை பொறுத்தவரையில் இந்தாண்டு அதிகபட்சமாக விழுப்புரம், திருப்பத்தூரில் தலா 45 சதவீதமும், புதுச்சேரியில் 40 சதவீதமும் அதிக மழை பதிவாகியுள்ளது. அதேநேரத்தில், கன்னியாகுமரியில் 39 சதவீதமும், ஈரோடு, திருச்சியில் தலா 30 சதவீதமும் குறைவான மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE