மதுரை :''தி.மு.க.,வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவதாக, வரும் சட்டசபை தேர்தல் அமைய வேண்டும்,'' என முதல்வர், பழனிசாமி பேசினார்.
ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரசாரத்திற்காக, நேற்று மாலை விமானம் மூலம், முதல்வர் இ.பி.எஸ்., மதுரை வந்தார். பெருங்குடியில் அவர் பேசியதாவது: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2021ல் சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டுள்ளது. ஏப்ரல், மே மாதம் தேர்தல் நடக்கவுள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், அ.தி.மு.க., அரசு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து, பல நல்ல திட்டங்களை வழங்க, மீண்டும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இது மக்கள் அரசு. மக்கள் என்ன எண்ணுகின்றனரோ அதை நிறைவேற்றும் அரசு.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தொடர்ந்து, சிந்தாமல் சிதறாமல் செயல்படுத்தி வருகிறோம்.
ஆனால், திட்டமிட்டு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார். தை பொங்கல் கொண்டாட, அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும், 2,500 ரூபாய், முழு கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்குகிறோம். தி.மு.க., ஆட்சியில் இதுபோல கொடுத்துள்ளனரா? எம்.ஜி.ஆர்., ஜெ., நாட்டுக்காக இறுதி காலம் வரை வாழ்ந்தனர். கருணாநிதி, அவரது வீட்டு மக்களுக்காக வாழ்ந்தார். தி.மு.க.,வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவதாக, வரும் சட்டசபை தேர்தல் அமைய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE