தர்மபுரி: தர்மபுரியில், முன்னாள் ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தர்மபுரி, ஆசிரியர் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜெகதலப்பிரதாபன், 72. இவர் மனைவி, சென்னையில் வசிக்கும் மகள்கள் கவிதா, 40, சங்கீதா, 30 ஆகியோரை பார்ப்பதற்காக கடந்த, 27ல் சென்னைக்கு சென்றார். சில நாட்களுக்கு முன், தர்மபுரியில் உள்ள ஜெகதலப் பிரதாபன் மொபைல்போனுக்கு, கவிதா போன் செய்துள்ளார். அவர் எடுக்காததால் சந்தேகமடைந்த, அவரது குடும்பத்தினர் சென்னையில் இருந்து புறப்பட்டு, நேற்று முன்தினம் இரவு, தர்மபுரி வீட்டிற்கு வந்தனர். ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டிய நிலையில் இருந்ததால், அதை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது ஜெகதலப்பிரதாபன், அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். தர்மபுரி டவுன் போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னாள் ராணுவ வீரர் மாரடைப்பால் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE