புதுச்சேரி: கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி., பங்கேற்கும் என, தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் சேது செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:அன்றாட நிர்வாக நடவடிக்கைகளில் தலையிட்டு, மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து காங்., மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், வரும் 8ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக செய்தி வெளியானது. இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி., ஆதரவு அளிக்கிறது.அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அனுப்பப்படும் கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி மறுக்கிறார். வேலைவாய்ப்பு கேந்திரமாக விளங்கிய 3 பஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான வாரியம் அமைக்கவில்லை. ஆண்டு தோறும் வழங்கிய தீபாவளி பரிசு கூப்பன் வழங்கவில்லை.வரும் 8ம் தேதி காங்., சார்பில் நடக்கும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி.,யுடன் இணைந்துள்ள சங்கங்களின் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பர்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE