சேலம்: ஸ்பின்னிங் மில்லில் நடந்த, 5.31 கோடி ரூபாய் மோசடி வழக்கில், மூன்று ஆண்டுக்கு பின், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சேலம், அம்மாபேட்டை, காமராஜர் காலனியில், சம்பந்தம் ஸ்பின்னிங் மில் உள்ளது. அங்கு, கணக்காளராக பணிபுரிந்த அந்தோணிஅருள்ராஜ், மில்லுக்கு சொந்தமான பணத்தை, வங்கி கணக்கில் இருந்து, சக ஊழியர், நண்பர்கள் கணக்கில் வரவு வைத்து, ஐந்து கோடியே, 31 லட்சத்து, 99 ஆயிரத்து, 562 ரூபாய் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து, மில் மேலாண் இயக்குனர் தேவராஜன், 2017, டிச., 7ல், சேலம் மாநகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விசாரணையில், 2012 டிச., 20 முதல், 2017, அக்., 11 வரை, தவணை முறையில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, எட்டு பேர் மீது, தலா ஐந்து பிரிவில் வழக்குப்பதிந்த போலீசார், அந்தோணிஅருள்ராஜ், சாந்தாஷீலா, மெர்சிலின், கோவிந்தராஜன், கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். சம்பத், நிபந்தனை ஜாமின் பெற்றார். தலைமறைவாக இருந்த இருவரை, மூன்று ஆண்டாக தேடி வந்தனர். கணக்காளரின் கூட்டாளியும், 70 லட்சம் ரூபாய் மோசடிக்கு உடந்தையான, கொட்டவாடி, பெருமாள் கோவில் தெரு, செந்தில்குமார், 31, மற்றும், 14 லட்சம் ரூபாய் மோசடிக்கு துணைபோன, கொண்டலாம்பட்டி, எஸ்.நாட்டாமங்கலம், மாதேஸ்வரன் காடு ராஜ்குமார், 41, ஆகியோரை, நேற்று, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE