புதுடில்லி: டில்லி எல்லைப் பகுதியில், கடும் மழையால் தேங்கிய நீரால், விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநில விவசாயிகள், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மத்திய அரசு, தொடர் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இதுவரை நடந்த பேச்சுகளில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.இதையடுத்து, இன்று மீண்டும் பேச்சு நடக்க உள்ளது.
இந்நிலையில், போராட்டம் நடக்கும் பகுதியில், நேற்று திடீர் மழை பெய்தது. இதனால், மழை நீர் தேங்கியது. மழையில் நனையாமல் இருக்க, கூடாரங்களில் விவசாயிகள் தஞ்சமடைந்தனர். எனினும், உடைகள், கம்பளிகள் மற்றும் விறகுக் கட்டைகள், நீரில் நனைந்ததால், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகினர். விறகு கட்டைகள் நனைந்துள்ளதால், உணவு சமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி வீர்பால் சிங் என்பவர் கூறியதாவது:போராட்டம் நடக்கும் பகுதியில், நீர் தேங்கிஉள்ளது. எனினும், இவற்றால், எங்களின் போராட்டம் தொய்வு அடையாது. இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, பஞ்சாபில் விரைவில் கொண்டாடப்பட உள்ள குளிர்கால திருவிழாவின் போது, மத்திய அரசின் விவசாய சட்ட நகல்களை எரிக்கப் போவதாக, விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE