அன்னூர்:ஆதாரில் திருத்தம் செய்ய, அன்னூர் தாலுகா அலுவலகம் வருவோர், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது.அரசு திட்டங்களில் உதவி, சலுகைகள் பெறவும், வங்கி கணக்கு, காஸ் இணைப்பு போன்றவற்றுக்கும் ஆதார் கார்டு அவசியம் தேவை. ஆதார் கார்டில், மொபைல் எண், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட மாற்றங்கள் செய்வதற்கு, தனியார் சேவை மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் மட்டும் ஆதார் திருத்தம் செய்யப்படுகிறது. அன்னூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில், தினமும் காலை 7:00 மணிக்கே 50க்கும் மேற்பட்டவர்கள் வந்து விடுகின்றனர். எனினும் தினமும் 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.இதனால் 25 கி.மீ., தொலைவில் உள்ள கீரணத்தம், வெள்ளானைப்பட்டி, கோவில்பாளையம் பகுதியில் இருந்து வந்து அன்னூர் ஆதார் மையத்தில் மணிக்கணக்கில் காத்து இருப்போர், ஏமாற்றத்துடன் அடுத்தநாள் வரவேண்டியுள்ளது.அன்னூர் தபால் அலுவலகத்தில் பழுது காரணமாக ஒன்றரை மாதமாக ஆதார் திருத்தம் செய்யப் படுவதில்லை. எனவே, தாலுகா அலுவலகத்தில் கூடுதலாக ஊழியர்கள் நியமித்து நாளொன்றுக்கு 100 பேருக்கு ஆதார் திருத்தம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE