மேட்டுப்பாளையம்:லிங்காபுரத்தில் குழி தோண்டி ஒரு மாதமாகியும், பாலம் கட்டுமானப்பணி எதுவும் நடக்காததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் பெருமாள் கோவில் அருகே நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட சாலை உள்ளது. இச்சாலையில் இருந்த பாலம் பழுதடைந்த நிலையில் இருந்தது. நெடுஞ்சாலை துறையினர் பாலத்தை சீரமைக்க டெண்டர் விட்டனர். பணியும் துவங்கியது. ஆனால் ஒரு சில நாட்களில், வனத்துறையினர் கட்டுமானப்பணியை தடுத்து நிறுத்தினர்.அதன்பிறகு ஒரு மாதமாக எந்த பணியும் நடக்கவில்லை. லிங்காபுரம் பகுதி மக்கள் கூறியதாவது:இரவு நேரத்தில் லிங்காபுரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பாலம் கட்ட குழி தோண்டிய போது, வனத்துறை அருகே பக்கச் சாலை அமைத்தனர். இரவில் யானைகள் நடமாட்டம் காரணமாக, பக்க சாலை வழியாக, செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பாலம் கட்டுமானப்பணியையும் நிறுத்தி விட்டனர். உடனடியாக அதை மீண்டும் துவங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஏற்கனவே இருந்த பழைய பாலத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில் புதிதாக பாலம் கட்டப்படுகிறது. வனப்பகுதியில் பாலம் கட்டுவதால், வனத்துறை அனுமதி பெறுவதற்காக, மாவட்ட வனத்துறை அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பாலம் கட்டப்படும்,' என்றார்.சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ''லிங்காபுரத்தின் இரு பக்கமும் வனப்பகுதி உள்ளது. இதன் மையப்பகுதியில் சாலையும், பாலமும் உள்ளது.இந்த பாலத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டும் போது, அனுமதி பெற வேண்டும். நெடுஞ்சாலைத்துறை மனு, மாவட்ட வன அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கட்டுமான பணிகள் துவங்க அனுமதிக்கப்படும்," என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE