போபால்: மத்திய பிரதேச அமைச்சரவை நேற்று விரிவு படுத்தப்பட்டது. காங்கிரசில் இருந்து வந்த, ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் இருவர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. காங்., மீது அதிருப்தி அடைந்த ஜோதிராதித்ய சிந்தியா, அந்த கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். அவருடன், பல, எம்.எல்.ஏ.,க்களும் விலகி, பா.ஜ.,வில் இணைந்தனர். இதனால், காங்.,கைச் சேர்ந்த கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.இதையடுத்து, கடந்தாண்டு, ஏப்.,ல், சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வரானார். அப்போது அவரது அமைச்சரவையில், சிந்தியாவின் ஆதரவாளர்களான துளசிராம் சிலாவத், கோவிந்த் ராஜ்புத் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள், எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக, இடைத் தேர்தல் நடக்கவில்லை. இதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து இருவரும் விலகினர். சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் வென்றதால், அவர்கள் அமைச்சர்களாக, நேற்று பதவியேற்றனர்.அவர்களுக்கு கவர்னர், ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிவ்ராஜ் சிங் சவுகான் அரசு, மூன்றாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE