ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, 40க்கும் மேற்பட்ட யானைகள் ராகி பயிர்களை நாசம் செய்த நிலையில், தர்மபுரி மண்டல வன பாதுகாவலர், விவசாயிகளை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட நொகனூர் காப்புக்காட்டில், 40க்கும் மேற்பட்ட யானைகளும், வட்டவடிவு பாறை மற்றும் சூரப்பன் குட்டை வனப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட யானைகளும் முகாமிட்டுள்ளன. இதனால், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், நொகனூர் காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய, 40க்கும் மேற்பட்ட யானைகள், நேற்று அதிகாலை, எஸ்.குருபட்டியில் நுழைந்து, அறுவடை செய்து, விவசாய நிலத்தில் வைத்திருந்த, மூன்று விவசாயிகளுக்கு சொந்தமான, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ராகி பயிர்களை நாசம் செய்தன. இதையறிந்த, தர்மபுரி மண்டல வனபாதுகாவலர் தீபக் பில்கி, நேற்று காலை எஸ்.குருபட்டிக்கு சென்று, யானைகளால் சேதமான பயிர்களை பார்வையிட்டார். பின் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அவர், உரிய இழப்பீடு, உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் உடனிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE