கரூர்: ''எழுதி கொடுத்ததை கூட, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சரியாக படிக்கவில்லை,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
கரூர் மாவட்டத்தில், 3.09 லட்சம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி, கரூர், வெங்கமேடு வி.வி.ஜி.,நகர் ரேஷன் கடையில் நடந்தது. கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பரிசு தொகுப்பு வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் நிர்வாக திறன் இல்லாமல் முடங்கிப் போய் கிடந்த கூட்டுறவுத்துறை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் புத்துயிர் பெற்றது. கடந்த, 2006 முதல் மாவட்டத்தில் கூட்டுறவுதுறை சார்பில், 3,440 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் நடந்த, தி.மு.க., மக்கள் சபை கூட்டத்தில், எழுதி கொடுத்ததை கூட, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சரியாக படிக்கவில்லை. கரூரில் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னும் கட்டப்படவில்லை என, பேசியுள்ளார். அதே போல, 16 பேருக்கு பயிற்சி கொடுத்து பொய்யான கேள்வி கேட்க வைத்துள்ளனர். குடிமராமத்து மூலம் மாவட்டத்தில் அனைத்து வாய்க்கால்களும் தூர் வாரப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒருவரை பிடித்து பயிற்சி கொடுத்து, கரூரில் வாய்க்கால்கள் தூர் வாரப்படவில்லை என, பேச வைத்துள்ளனர். தி.மு.க., கூட்டம் நடத்திய, அதே இடத்தில் பதிலடி கொடுப்பேன். இவ்வாறு, அவர் பேசினார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் திருவிகா உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE