புதுடில்லி:கொரோனா தடுப்பூசி, வரும், 13 முதல், வினியோகிக்கப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனாவுக்கு எதிராக, 'சீரம்' நிறுவனம் தயாரித்த, 'கோவிஷீல்டு' தடுப்பூசி, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்த, 'கோவாக்சின்' தடுப்பூசியை, அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது: கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில், 43.96 சதவீதம் பேர் மட்டுமே, மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள், வீட்டு தனிமையில் உள்ளனர். தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்த நாளில் இருந்து, 10 நாட்களில், தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர தயாராக உள்ளோம்.
அதாவது, ஜன., 13ம் தேதி முதல், பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். எனினும், இது பற்றி மத்திய அரசு தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். மும்பை, சென்னை மற்றும் கோல்கட்டாவில் தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன. மேலும், 37 தடுப்பூசி மையங்கள் உள்ளன. இங்கு மொத்தமாக தடுப்பூசியை சேமித்து வைக்கவும், வினியோகிக்கவும் முடியும். சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களின் விபரங்கள் ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE