சென்னை:'நீர் நிலைகளில் எந்த ஆக்கிரமிப்பும் இருக்கக் கூடாது' என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் இத்தலார் என்ற கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவு உள்ள நீர் நிலையை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் அதை அகற்றக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சிவகுமார் ஆஜராகி ''நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்'' என்றார்.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'அந்த இடத்தில் கேரட் பயிரிடுகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்கிறோம்' என்றார்.
இதையடுத்து தலைமை நீதிபதி 'பொதுச் சொத்துக்களான நீர் நிலைகள் அரசு நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது. அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்தால் அதை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகள் உயிர் நாடியாக உள்ளன. அவற்றுக்கு எந்த விதத்திலும் ஆபத்து வரக்கூடாது' என்றார்.ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை அளிக்கும்படி நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE