சென்னை:தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சோதனை நிறைவடைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் முதல் நிலை சோதனை நடந்து வருகிறது.
தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.கொரோனா காரணமாக 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரித்து அதே பகுதியில் கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது.
கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதால் கூடுதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.இதற்காக மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களில் முதல் நிலை சோதனை நடத்தப்படுகிறது.
ராமநாதபுரம், சிவகங்கை, அரியலுார், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், வேலுார் மாவட்டங்களில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்களின் செயல்பாடு பரிசோதிக்கப்பட்டு முதல் நிலை சோதனை முடிக்கப்பட்டுள்ளது.குறைபாடுடைய இயந்திரங்கள் தனியாக வைக்கப்பட்டுள்ளன. அவை தேர்தலில் பயன்படுத்தப்படாது.
முதல் நிலை சோதனை முடிந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முழு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.ஏழு மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சோதனை நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE