பீஜிங்: கடந்த இரண்டு மாதங்களாக மாயமாகியுள்ள சீன தொழிலதிபர் ஜாக் மா, கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின், 'நம்பர் ஒன்' பணக்காரரான, ஜாக் மா, அரசு வங்கி மற்றும் நிதித் துறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிற்போக்கான செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததால், சீன அரசின் கோபத்திற்கு ஆளானார். இதையடுத்து, சீன அரசு, ஜாக் மாவின், 'ஆன்ட்' நிறுவன பங்கு வெளியீட்டை நிறுத்தியது.
ஜாக் மாவின் அலிபாபா குழும நிறுவனங்களில் சட்டமீறல் நடந்ததாக கூறி, அபராதம் விதித்து, அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக, ஜாக் மா, எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின், 'பீப்பிள்ஸ் டெய்லி' பத்திரிகை, ஜாக் மா, கண்காணிப்பு வளையத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

சீன அரசு, சமூகத்தில் மதிப்புமிக்கவர்களை கைது செய்தால், கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரும். அவர்கள் குறித்த விபரங்களை வெளியிடாது. இதன்படி, ஜாக் மா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைபட்டிருக்கவோ அல்லது வீட்டுக் காவலில் இருக்கவோ அதிகம் வாய்ப்பு உள்ளதாக, ஹாங்காங்கின், 'தி ஏஷியா டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஜாக் மாவை 'குதிரை மாமா' என, அடைமொழியில் அழைத்த சீன பத்திரிகைகள், தற்போது, மக்கள் பணத்தை சுரண்டியவர் என்பதை குறிக்க, 'ரத்தம் குடிக்கும் காட்டேரி' என, வசைபாடத் துவங்கியுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE