கடலுார் : கடலுார் மாவட்டத்தில் வரும் 17ம் தேதி, 1611 மையங்கள் மூலம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 714 குழந்தைகளுக்குபோலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஆண்டு தோறும்,5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது.1995ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 26 ஆண்டாக இம்முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 17ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
கடலுார் மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் உள்ளிட்ட 1611 இடங்களில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 44 ஆயிரத்து 714 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.முகாம் ஒன்றுக்கு 4 பேர் வீதம் பல்வேறு துறை களைச் சேர்ந்த 6,444 பணியாளர்கள், 196 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படுத்தப்பட உள்ளனர்.இப்பணிகளில் சுகாதாரத் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை, ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறை, வருவாய்த் துறை, இந்திய குழுந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்பட உள்ளன.ஒவ்வொரு முகாமிலும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
சொட்டு மருந்து போடும் பணியாளாகள் குழந்தைகளைத் தொடாமல் கொரோனா வழிமுறைகளைக் கடைபிடித்து போலியோ சொட்டு மருந்தை வழங்க வேண்டும்.முகாம் நடைபெறும் நாளன்று ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகளுக்கு 18 மற்றும் 19ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் வீடு வீடாகச் சென்று பார்வையிட்டு போலியோ சொட்டு மருந்து வழங்குவார்கள். மக்கள் கூடும் இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும்.
இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறலாம் என, கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி நேற்று அவரது அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை நடத்தினார். டி.ஆர்.ஓ., அருண்சத்தியா, கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, உலக சுகாதார நிறுவன நோய் தடுப்பு டாக்டர் சாயிராபானு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி முதல்வர் மிஸ்ரா, மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE