புதுடில்லி : டில்லியில், இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி, நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச விவசாய சங்கத்தினர், டில்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கோரிக்கையை வலியுறுத்தி, இன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என, அவர்கள் அறிவித்து இருந்தனர். போராட்ட பகுதியில் பலத்த மழை தொடர்வதால், டிராக்டர் பேரணி நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விவசாய சங்க நிர்வாகிகள் நேற்று கூறும்போது, 'எங்கள் போராட்டம், வரும் நாட்களில் மிக தீவிரமடையும். வானிலை மோசம் அடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானதால், டிராக்டர் பேரணி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது' என்றனர்.
இதற்கிடையே, பஞ்சாப் பா.ஜ., தலைவர்கள் சுர்ஜித் குமார் ஜியானி மற்றும் ஹர்ஜித் சிங் கிரெவால் ஆகியோர், டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர்.பஞ்சாப் தொடர்பான பிரச்னைகளுக்காக பிரதமரை சந்தித்ததாக அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE