புதுடில்லி:மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் வழக்குகள் மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்க்கும் வழக்குகளை, 11ம் தேதி விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதேபோல், டில்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.கடந்த, டிச., 17ல் பிறப்பித்த உத்தரவில், 'அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு உரிமை உள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.
அதே நேரத்தில், பொதுமக்களின் உரிமைகளை இந்த போராட்டம் பாதிக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.இந்நிலையில், எம்.எல். சர்மா என்ற வழக்கறிஞர், வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். 'இதுபோன்ற சட்டங்களை இயற்றும் அதிகாரம், மத்திய அரசுக்கு இல்லை. அதனால், இந்த சட்டங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை, 8ம் தேதி விசாரிப்பதாக, தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு கூறியது.அப்போது,''வேளாண் சட்டங்கள் தொடர்பாக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன், மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. மிகவும் சிறந்த முறையில் பேச்சு நடந்து வருகிறது. ''நாளை, அடுத்த சுற்று பேச்சு நடக்கிறது. அதனால், வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்,'' என, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா குறிப்பிட்டார்.அதையடுத்து, 'இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக, வரும், 11ல் விசாரிக்கப்படும்' என, அமர்வு கூறிஉள்ளது.
தொடரும் போராட்டம்
வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லையில், பஞ்சாப் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், 40வது நாளை எட்டியுள்ளது.கடும் குளிர் மற்றும் திடீர் மழையைப் பொருட்படுத்தா மல், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.மோசமான வானிலை காரணமாக, நேற்று நடத்துவதாக இருந்த டிராக்டர் பேரணி, இன்று நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையேயான, எட்டாவது சுற்று பேச்சு நாளை நடக்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE