லண்டன்:தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவது அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவலின் தீவிரம் குறையாததால், பல நாடுகளில், புத்தாண்டு களையிழந்துள்ளது.
சீனாவின், ஹுபய் மாகாண தலைநகரான வூஹானில், 2019 டிசம்பர், 31ல், முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்பின், இந்த வைரஸ், மற்ற நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியா உட்பட பல நாடுகளும், வைரசின் பிடியில் சிக்க துவங்கின. இதையடுத்து, பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
பின், கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மேலும், கொரோனாவை தடுக்க, பல நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. தடுப்பூசிகள் தயாராகிவிட்ட நிலையில், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகளில், அவற்றை மக்களுக்கு செலுத்த, அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. இது பழைய வைரசை விட, 70 சதவீதம் வேகமாக பரவுவதாக, பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பிரிட்டனில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பிரிட்டனுக்கான விமானச் சேவையை, 40க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.இப்போது, இந்த புதிய கொரோனா வைரஸ், ஜப்பான், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பரவத் துவங்கியுள்ளது. இதனால், அந்நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்துவிட்டன.
இது பற்றி உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரீஸ் கூறியதாவது: தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுதும், 8.68 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து, 6.15 கோடி பேர் குணம் அடைந்து உள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு, 18.74 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்; 2.34 கோடி பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE