சென்னை: ''தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்படும். இதற்காக, மாவட்டங்களில், நாளை தடுப்பூசி ஒத்திகை நடைபெறும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, பெரியமேடில் உள்ள, மத்திய மருந்து கிடங்கில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின், அவர் அளித்த பேட்டி:முதல்வர் உத்தரவுப்படி, போர்க்கால அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும், தடுப்பூசி ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே, ஐந்து மாவட்டங்களில், 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும், தடுப்பூசி ஒத்திகை, நாளை நடைபெற உள்ளது.
இந்த ஒத்திகையில், காத்திருப்போர் அறை, தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறை ஆகியவற்றில், வடிவமைப்பு போன்றவை குறித்து ஆராயப்படும். தடுப்பூசி போடுவதற்கான வசதிகள், தினமும், 100 பேருக்கு தடுப்பூசி போடும்போது, எவ்வளவு நேரம் ஆகும் என்பதும் ஒத்திகை பார்க்கப்படும்.தமிழக அரசு சார்பில், 2020 ஜூன் மாதம் முதல், தடுப்பூசிக்கான பணிகள் துவங்கப்பட்டு, 38 மாவட்டங்களில், 51 இடங்களில் தடுப்பூசிகள் வைப்பதற்கான, நடமாடும் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில், தடுப்பூசி போடுவதற்கான ஊசிகள், ஏற்கனவே, 17 லட்சம் கையிருப்பில் உள்ளன. மத்திய அரசு முதல் கட்டமாக, 33 லட்சம் ஊசிகளை ஒதுக்கி உள்ளது. அதில், 28 லட்சம் ஊசிகள் வந்து விட்டன. இவை, மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்படும்.தடுப்பூசிக்கான மருந்து, மத்திய அரசு அளிக்கும்பட்சத்தில், அடுத்த நாள் முதல், தடுப்பூசி போடும் பணிகள், போர்க்கால அடிப்படையில் நடைபெறும்.
இதன்படி, ஆறு லட்சம் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், 2,850 மையங்களில், தினமும், 100 பேர் வீதம் தடுப்பூசி போடப்படும்.தமிழகத்தில், 2.50 கோடி தடுப்பு மருந்துகள் சேமித்து வைக்க, போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, தடுப்பூசி போடப்படும். குழந்தைகள், கர்ப்பிணியருக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து, மருத்துவ வல்லுனர் குழுவுடன் ஆலோசிக்கப்படும்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE