உடுமலை : ஏழு குள பாசனத்திட்ட குளங்களில், ஆகாயதாமரை செடி பரவலைத்தடுக்க, தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்திலுள்ள குளங்கள் வாயிலாக, இரண்டாயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் சாகுபடிக்கு, நிலத்தடி நீர் ஆதாரமாக இக்குளங்கள் உள்ளன.திருமூர்த்தி அணையிலிருந்து, இக்குளங்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் திறக்கப்படுகிறது.மீன் வளர்ப்பு ஏலம் வாயிலாக, குளங்களிலிருந்து பொதுப்பணித்துறைக்கு வருவாயும் கிடைத்து வருகிறது. பெரியகுளம், செங்குளம், ஒட்டுக்குளம் உட்பட அனைத்து குளங்களிலும், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து வருகின்றன.
ஷட்டர் பகுதி முழுவதும், இச்செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், கால்நடைகள் அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீன் பிடித்தலும் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: ஆகாயத்தாமரை செடிகள், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இச்செடிகளில், கோடை காலத்தில், இலைகளின் வழியாக நீராவிப்போக்கு அதிகளவு இருக்கும்.இதனால், குளத்தில், நீர் மட்டம் வேகமாக குறையும். சூரிய ஒளி தண்ணீரில் ஊடுருவ தடையாக இருப்பதால், நீர் வாழ் தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் வளர்ச்சியை தடுக்கும்.
இத்தாவரம் இறந்து மட்கும் போது, தண்ணீர் மாசடையும்.கொசுக்கள் உற்பத்திக்கு நல்ல சூழ்நிலையை இச்செடிகள் ஏற்படுத்திக்கொடுக்கின்றன. எனவே, இவற்றை முழுமையாக அகற்ற தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர். 'ஆகாயத்தாமரை செடிகள் பரவினால், ஷட்டரில் தண்ணீர் திறக்கும் போது, அவற்றில் அடைப்பு ஏற்படுகிறது. பகிர்மான வாய்க்கால்களில், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE