மதுரை:சிறையில் கொரோனா பரவுகிறது எனக்கூறி, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி ரவிச்சந்திரன் விடுப்பு அனுமதிக்க கோரியதில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றமதுரைக் கிளை உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டை ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனு:எனது மகன் ரவிச்சந்திரன். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவ்வழக்கில் ரவிச்சந்திரன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் 2018 ல் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அதில் எவ்வித முடிவும் எடுக்காமல் நிலுவையில் உள்ளது.சிறைகளில் கொரோனா பரவுகிறது. சிறையில் சமூக இடைவெளியை பின்பற்ற வாய்ப்பில்லை.
ரவிச்சந்திரனுக்கு நீண்டகால விடுப்பு அல்லது இரண்டு மாதங்கள் சாதாரண விடுப்பு வழங்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜேஸ்வரி குறிப்பிட்டார்.நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் அமர்வு தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஜன.,27 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE