கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸில் காவல் உதவி மையம் போலீசார் பணியில் இல்லாததால் பூட்டியே காணப்படுகிறது.கள்ளக்குறிச்சி ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் காவல் உதவி மையத்தை கடந்த 2018ம் ஆண்டு, செப். 16ம் தேதி அப்போதைய எஸ்.பி., ஜெயக்குமார் திறந்து வைத்தார். நெடுஞ்சாலையில் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுப்பது. நகரப்பகுதிக்குள் கனரக வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது.நகருக்குள் நிர்வகிக்கப்பட்ட ஒருவழிச்சாலை முறைகளை சீர்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக இப்பகுதியில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அன்று முதலே அங்கு எந்த ஒரு போலீசாரும் பணியமர்த்தப்படாமல் இருப்பதால் திறக்கப்படாமல் பூட்டியே காணப்படுகிறது.அவ்வழியாக தினமும் பலமுறை தற்போதைய எஸ்.பி., ஜியா உல்ஹக் உள்ளிட்ட போலீசார், அரசுத்துறை அதிகாரிகள் சென்று வருகின்றனர். இருப்பினும், அந்த காவல் உதவி மையத்தில் போலீசாரை பணியமர்த்தி நெடுஞ்சாலை போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண அக்கறை காட்டாமல் உள்ளனர்.எனவே ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள காவல் உதவி மையத்தில் போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தை சீரமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE