கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் இருந்து அண்ணாநகர் செல்லும் பிரிவு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை நீலமங்களம் மேம்பாலத்தில் துவங்கி ஏமப்பேரில் முடிவடைகிறது. கள்ளக்குறிச்சியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால், அண்ணாநகர் மற்றும் தென்கீரனுார், விளம்பார் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் இரண்டாவது மேம்பாலத்தின் அருகே உள்ள பிரிவு சாலை வழியாக செல்கின்றனர். எரிபொருள் சேமிப்பு, நேர சிக்கம் என்பதால் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட பைக், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் இவ்வழியாக சென்றன.புறவழிச்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் இந்த சாலையில் மெகா சைஸ் பள்ளங்கள் உள்ளன. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பள்ளங்கள் பெரிதாகி, மழை நீர் தேங்கி சேராக மாறியுள்ளது. இதனால் பைக்கில் செல்பவர்கள் சேற்றில் சிக்கி கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரண்டு பைக்குகள் எதிரெதிரே வந்தால் ஒன்றையொன்று கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் பள்ளத்தில் சிக்குவதால், இவ்வழியாக செல்வதே இல்லை. இதனால் கார், ஆட்டோ வாகன ஓட்டிகள் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி எரிச்சலடைகின்றனர். எனவே, புறவழிச்சாலையில் இருந்து பிரியும் இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்து புதிய தார்சாலை அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE