விழுப்புரம் - விழுப்புரம் மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று துவங்கியது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், கொரோனா நோய் தொற்று தாக்கத்தின் தீவிரத்தை யொட்டி, அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்டது.2020-21ம் கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் பொது தேர்வையொட்டி, பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்திட பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., சுயநிதி உள்ளிட்ட 191 உயர்நிலை பள்ளிகளிலும், 194 மேல்நிலை பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.இதில், பெற்றோர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர்.கருத்து கேட்பில் பங்கேற்ற பெற்றோர் பலர், பள்ளியை மாணவர்களுக்கான பாதுகாப்போடு திறக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.இன்று (7 ம் தேதி) இரவு 7.00 மணிக்குள், பெற்றோர்களின் கருத்து கேட்கப்பட்டு, அதன் முடிவுகள் அனைத்தும் பள்ளிக்கல்வி துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியாதெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE