ஆத்தூர்: அறுவடை தருணத்தில், மழையால் விளைபயிர்கள் நனைந்து சேதமாவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆத்தூர், கெங்கவல்லி சுற்றுவட்டார கிராமங்களில், முக்கிய நன்செய் பயிரான சம்பா பருவத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் விளைந்து, அறுவடைக்கு தயாராக உள்ளது. பருத்தி செடிகளில் முற்றிய காய்கள் வெடித்து பஞ்சு வெளிப்பட்டு வருகிறது. மக்காச்சோள பயிர்களில் கதிர்கள் முற்றிய நிலையில் உள்ளன. மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து செடிகளும் விளைந்து அறுவடை செய்யும் பருவத்தில் உள்ளன. இந்நிலையில், இரு நாளுக்கு முன், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று, மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. மேலும், சில நாள் மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம்அறிவித்துள்ளது. அறுவடை தருணத்தில், மழை பெய்வது, பயிர்களின் மகசூலை பாதிக்கும். அறுவடை செய்த நெல், பருத்தி, உளுந்து, மக்காச்சோளம் மணிகளை உலர்த்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால், தரம் குறைந்து எதிர்பார்த்த விலை கிடைக்காது. மழை தொடர்ந்தால், விளை பயிர்கள் நனைந்து அதிகளவில் நஷ்டம் ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE