சேலம்: போலீசார் தொந்தரவு செய்வதாக கூறி, மூட்டை தூக்கும் தொழிலாளி, குடும்பத்துடன், கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
சேலம், பள்ளப்பட்டி ராவனேஸ்வரன் நகரை சேர்ந்தவர் மாணிக்கராஜா, 30. லீபஜாரில் மூட்டை தூக்கும் தொழில் செய்கிறார். இவரது மனைவி சுமதி, 25. இவர்களது மகள்கள் நிஷாந்தி, 10, கிருத்திகா, 8. கடந்த, 2012ல், பள்ளப்பட்டியில் நடந்த கொலையில், மாணிக்கராஜா கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தார். இந்த வழக்கு, நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதுதொடர்பாக, பள்ளப்பட்டி போலீசார், வாரந்தோறும் மாணிக்கராஜா வீட்டுக்கு வந்து விசாரித்து, ஸ்டேஷனுக்கு வரும்படி தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, மாணிக்கராஜாவின் குடும்பத்தினரை, போலீசார் கண்காணித்ததால், அப்பகுதி மக்கள், அவர்களிடம் சரியாக பேசுவதில்லை என, ஆதங்கப்பட்டனர். இதனால் மனமுடைந்த மாணிக்கராஜா, அவரது குடும்பத்தினர், போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவாயில் அருகே, நேற்று, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விசாரித்தனர். பின், நான்கு பேரையும், அன்னதானப்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE