சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய கடலை, நவீன 'டெலி ப்ராங்கோஸ்கோபி' கருவி மூலம் நீக்கப்பட்டது.
இதுகுறித்து, சேலம் அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூரை சேர்ந்த, ஒன்றரை வயது ஆண் குழந்தை, ஒரு வாரமாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுள்ளது. வீடு அருகே மருத்துவம் பார்த்தும், மூச்சுத்திணறல் அதிகரித்ததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. பரிசோதித்ததில், மூச்சுக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சிறப்பு மருத்துவர் குழு, அதிநவீன, 'டெலி ப்ராங்கோஸ்கோபி' கருவி மூலம், சுவாசக்குழாயில் அடைத்திருந்த கடலை பருப்பை வெளியே எடுத்தனர். தற்போது, குழந்தை நன்றாக சுவாசிக்கிறது. 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு, நிலக்கடலை, சப்போட்டா விதை, சீதா விதை, புளியங்கொட்டை, சிறு கடினமான பொருட்களை, விளையாட தருவதை தவிர்க்க வேண்டும். மூச்சுக்குழாயில் புகுந்து, உயிருக்கே ஆபத்தான நிலை உருவாகலாம். இவ்வாறு அவர் கூறினார். உடன், காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் கிருஷ்ணசுகந்தி உள்ளிட்டோர் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE