அமராவதி:ஆந்திராவில், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளை, 'ஆன்லைன்' வாயிலாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏ.பி.பி.எஸ்.சி., எனப்படும், ஆந்திர பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும், 'குரூப் - 1, குரூப் - 2, குரூப் - 3' உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும், ஆன்லைன் வாயிலாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஏ.பி.பி.எஸ்.சி., செயலர் ஆஞ்சநேயலு கூறியதாவது:அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு களின் முழு செயல்முறையையும், ஆன்லைன் வாயிலாக, காகித உபயோகமின்றி நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த செயல்முறை குறித்து, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களிடம் கேட்டறிந்தோம். நாட்டில், டிஜிட்டல் முறையில் தேர்வுகள் நடத்தப்படவுள்ளது, இதுவே முதன்முறை.
அதன்படி, தேர்வில் வரும், 'ஆப்ஜெக்டிவ் டைப்' எனப்படும், 'சரியான விடையை தேர்வு செய்க' என்ற பிரிவுக்காக, ஓ.எம்.ஆர்., காகிதங்கள் பயன்படுத்தப்படும். அவை, 'ஸ்கேன்' செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பின்னர், அவை, ஆன்லைன் வாயிலாக திருத்தப்படும்.
இந்த புதிய செயல்முறை, வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். இதில், எந்தவிதமான முறைகேடுகளும் நடக்க வாய்ப்பு இல்லை. இதன் வாயிலாக, தேர்வாணைய அதிகாரிகளுக்கு இருக்கும் சுமைகள் குறையும். இவ்வாறு, அவர் கூறினார்.ஆந்திர அரசின் இந்த செயல்முறையை பின்பற்றி தேர்வுகளை நடத்த, தமிழக அரசும் முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE