ரிஷிவந்தியம்; எகால் கிராம ஏரிகள் நிரம்பி அருகில் உள்ள விளைநிலங்கள் வழியாக அவிரியூர் ஏரிக்கு தண்ணீர் சென்றதால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.ரிஷிவந்தியம் அடுத்த எகால் கிராமத்தில் 3 ஏரிகள் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையினால் எகால் கிராம ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீர் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையினால் மூன்று ஏரியும் நிரம்பி, உபரி நீர் வாய்க்கால் வழியாக அவிரியூர் ஏரிக்கு சென்றது. வாய்க்கால் பரப்பளவினை விவசாயிகள் ஆக்கிரமித்திருந்ததாலும், அதிகளவு மழையினாலும் தண்ணீர் பெருக்கெடுத்து விளைநிலங்களில் புகுந்து, மூன்று அடி உயரத்திற்கு தேங்கியது. இதனால் நெற்பயிர்கள் முழுதுமாக தண்ணீரில் மூழ்கின.தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கரையினை அகலப்படுத்தியதையொட்டி தண்ணீர் குறைந்து நெற்பயிர்கள் வெளியே தெரிந்தன. அறுவடை நேரத்தில் நெற்பயிரினை தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். இதேபோல் நுாரோலை, மையனுார் உட்பட பல்வேறு பகுதிகளிலும் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE