கிருஷ்ணகிரி: சபரிமலை பிரசாதம் தபாலில் பெற, ஆன்லைன் முன்பதிவு துவங்கி உள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: சபரிமலை ஐயப்பன் கோவிலில், தபால் மூலம் பிரசாதம் வழங்குவதற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியுள்ளது. அக்கோவிலில், மண்டல மகரவிளக்கு சீசனையொட்டி திருவிதாங்கூர் தேவஸ்தானமும், தபால் துறையும் இணைந்து, பிரசாதத்தை தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகம், ஓசூர் துணை அஞ்சலகம் மற்றும், 38 துணை அஞ்சலகங்களில் இதற்கான முன்பதிவு நடக்கிறது. இதில் அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் அடங்கிய பார்சலின் விலை, 450 ரூபாய். ஒரு நபர், ஒரு விண்ணப்பத்தில் அதிகபட்சம், 10 பிரசாத பாக்கெட்டுகள் பெற, முன்பதிவு செய்யலாம். இந்த பிரசாதம், 'ஸ்பீட் போஸ்ட்' மூலம், முன்பதிவு செய்த பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், வீட்டிலிருந்தே ஐயப்பனின் அருளை பெற்று மகிழ, பொதுமக்கள் அனைவரும், கிருஷ்ணகிரி கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE