கரூர்: கரூரில், கல்லூரி மாணவியை காதலித்த வாலிபர், குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, மாணவியின் தந்தை உட்பட இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கரூர், காமராஜபுரத்தை சேர்ந்த ஜெயராம் மகன் ஹரிஹரன், 22; சலூன் கடை நடத்தி வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த, 18 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மாணவியின் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. ஹரிஹரனை பேச்சு வார்த்தை நடத்த, மாணவியின் உறவினர்கள் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு அழைத்துள்ளனர். இதனால், ஹரிஹரன் கோவில் முன்புறம் சென்றார். மாணவியின் தந்தை வேலன், 40, பெரியப்பா சங்கர், 47, சித்தப்பா முத்து, 35, மாமன்கள் கார்த்திகேயன், 40, வெள்ளைச்சாமி ஆகியோர், ஹரிஹரனிடம் காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த சங்கர், ஹரிஹரனை கத்தியால் குத்தியுள்ளார். மற்றவர்கள், அடித்து உதைத்துள்ளனர். பலத்த காயமடைந்த ஹரிஹரன், அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சங்கர், கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகியோரை கைது செய்த போலீசார், நேற்று, வேலன், முத்துவை கைது செய்தனர். முன்னதாக, 'கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி நேற்று காலை, 11:30 மணியளவில், ஹரிஹரனின் உறவினர்கள், கரூர் - திருச்சி சாலை காந்தி கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்படுவர் என, போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE