லாகூர்: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாக்., நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக இந்திய உளவு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில், பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டரான ஜகியுர் ரஹ்மான் லக்வி இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் சமர்ப்பித்த இந்தியா, லக்வியை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக, லக்வியை கடந்த 2009-ம் ஆண்டு கைது செய்தனர். பின்னர், 2015ல் ஜாமினில் வெளியே வந்தான்.

இந்நிலையில், பாகிஸ்தானில் செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு லக்வி நிதியுதவி வழங்கி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதன்பேரில், பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், லக்வி நடத்தி வந்த தொண்டு நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று, அதனை பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கி வந்தது கண்டறியப்பட்டது. இதன் பேரில், லக்வியை தீவிரமாக தேடி வந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள், பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் அருகே கடந்த 2ம் தேதி கைது செய்தனர். பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லக்விக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE