பெங்களூரு:போலிச் சாமியாரிடம் இருந்து, 75 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பாக, கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி ராதிகா, போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், போலீசார் மூன்றரை மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இறுதியில், அவரது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.மோசடி கர்நாடகாவில், போலிச் சாமியார் யுவராஜ் என்பவர், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களுடன் தனக்கு நெருக்கம் இருப்பதாக கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார். கடந்த மாதம், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், சிறையில் உள்ளார்.
முன்னதாக, அவரிடம் நடத்திய விசாரணையில், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமியின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான ராதிகாவின் வங்கி கணக்குக்கு, 75 லட்ச ரூபாய் செலுத்தியிருந்தது தெரிய வந்தது.அதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி, ராதிகாவுக்கு, போலீஸ் தரப்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
அதன்படி, பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள, குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு வந்த அவரிடம், மூன்றரை மணி நேரம் விசாரணை நடந்தது. பரபரப்புஉதவி போலீஸ் கமிஷனர் நாகராஜ் தலைமையிலான குழு, ராதிகாவிடம் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பின், அவரை வீட்டுக்கு அனுப்பிய போலீசார், முன்னதாக, ராதிகாவின் மொபைல் போனை வாங்கி வைத்துக் கொண்டனர்.முன்னாள் முதல்வரின் இரண்டாவது மனைவியிடம், மோசடி வழக்கு தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்துவது, கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE