சென்னை:விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகராட்சியை, மாநகராட்சியாக உயர்த்தும் நடவடிக்கைக்காக, அதனுடன் திருத்தங்கல் நகராட்சியை இணைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பேசிய, முதல்வர் இ.பி.எஸ்., 'விரைவில், சிவகாசி நகராட்சி, மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்' என்றார். இதற்கான நடவடிக்கைகளை, நகராட்சி நிர்வாகத் துறை தீவிரப்படுத்தி உள்ளது. முதல் கட்டமாக, சிவகாசி நகராட்சியுடன், பிற பகுதிகளை இணைக்கும் பணிகள் துவங்கிஉள்ளன.
தற்போதைய நிலவரப்படி, சிவகாசி நகராட்சி பகுதி, 6.89 சதுர கி.மீ., பரப்பளவிலும், திருத்தங்கல் நகராட்சி, 13 சதுர கி.மீ., பரப்பளவிலும் உள்ளன. சிவகாசி நகராட்சியின், 33 வார்டுகளையும், திருத்தங்கல் நகராட்சியின், 21 வார்டுகளையும் ஒருங்கிணைந்து, 54 வார்டுகள் கொண்டதாக, சிவகாசி மாநகராட்சி உருவாக்கப்படுகிறது.இதற்கான அறிவிக்கையை, நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்டுள்ளது. இதன் மீது, ஆட்சேபனை இருந்தால், ஆறு வாரங்களுக்குள் தெரிவிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE