ஊட்டி;நீலகிரி மாவட்டம், ஊட்டி, ஜி1 போலீஸ் ஸ்டேஷன் காவலர் அஜிதா குமாரி நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டில் ரோந்து சென்றார். முதியவர் ஒருவர் தலையில் காயத்துடன், மது போதையில் படுத்திருந்தார்.அவரை மீட்ட போலீசார், ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், 2.27 லட்சம் ரூபாய் இருந்தது. அதை, போலீசார் மீட்டு பத்திரப்படுத்தினர். விசாரணையில், ஊட்டி அருகே, சோமர்டேல் எஸ்டேட்டை சேர்ந்த 75 வயது முதியவர் என தெரிய வந்தது. நேற்று முன்தினம் ஊட்டிக்கு வந்துள்ளார். பேரனின் மருத்துவ செலவுக்காக, வங்கி கணக்கிலிருந்து, 2.27 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார்.நேற்று, உறவினர்கள், ஜி1 போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். எஸ்.ஐ., ஜெயபிரகாஷ், விசாரணை செய்த பின், பணத்தை, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். அவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE