ஊத்துக்கோட்டை : ஆற்று பாலத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக படிக்கட்டில் ஏறிச் செல்லும் பயணியர் வசதிக்காக, மின் விளக்கு அமைக்க வேண்டும்.
தற்போது, மொபைல் போன் வெளிச்சத்தில் செல்ல வேண்டி அவல நிலை உள்ளது. ஊத்துக்கோட்டை, ஆரணி ஆற்றின் மேல், பாலம் கட்ட, 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடந்து வருகின்றன.பாலத்தின் அருகே போக்குவரத்திற்காக போடப்பட்ட தற்காலிக சாலைகள், சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சேதம் அடைந்தது. இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
பாலத்தின் பணி முழுமையாக நிறைவடையாத நிலையில், பொதுமக்கள் நடந்து செல்ல தற்காலிக இரும்பு படிக்கட்டு அமைக்கப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பக்கம், மின் விளக்கு அமைக்கப்பட்டது.மறுபக்கம் மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் படிக்கட்டில் ஏற சிரமப்படுகின்றனர். தங்களிடம் உள்ள மொபைல் போன் விளக்கின் வெளிச்சம் மூலம் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, பாலத்தின் மீது நடந்து செல்ல அமைக்கப்பட்ட படிக்கட்டு அருகே, மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE