தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், வயல்களில் தண்ணீர் தேங்கி, 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்டிருந்த நிலக்கடலை பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், 500 ஏக்கருக்கு மேல் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.இந்த ஆண்டு, 'நிவர் மற்றும் புரெவி' புயல் காரணமாக, தொடர்ந்து மழை பெய்வதால், சாகுபடி செய்த நிலக்கடலை செடிகள் பாதிக்கப்பட்டது.கடந்த வாரங்களில் மழை இல்லாததால், மீண்டும் சில விவசாயிகள் நிலக்கடலை விதைப்பு செய்தனர். மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால், அந்த வயல்களில் தண்ணீர் தேங்கி நிலக்கடலை வீணாகியது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:மார்கழி பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்தால், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி, அதிக மகசூல் கிடைக்கும். தற்போது மார்கழியில் தொடர்ந்து மழை பெய்வதால், வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏற்கனவே, விதைத்து முளைத்த நிலக்கடலை பயிர்களும், புதிதாக விதைப்பு செய்த நிலக்கடலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.ஏக்கருக்கு, 20 ஆயிரம்வரை செலவு செய்து, அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, நிலக்கடலை சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும், நிவாரணமாக ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE