மதுரை : திண்டுக்கல்லில் பிறந்து 60 நாளே ஆன பச்சிளம் குழந்தை மஞ்சள் காமாலை நோய் அறிகுறியால் அவதிப்பட்டது. இரு வாரங்களுக்குப் பிறகும் பாதிப்பு நீடித்தது.
சிகிச்சைக்காக மதுரை பிரீத்தி பல்நோக்கு மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர். பரிசோதனையில் பித்தநீர் வெளியேறும் பாதை உருவாகாததால் பித்தம் கல்லீரலில் தேங்கி, பின் ரத்தத்தில் கலந்து மஞ்சள் காமாலை ஏற்பட்டது தெரிந்தது. இது தவிர சிறுகுடல், பெருகுடல் இடம் மாறி இருந்ததையும் டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் பித்தநீர் வெளியேறும் பாதைக்கு மாற்றாக குடலின் ஒரு பகுதியை கல்லீரலுடன் இணைத்து பாதை உருவாக்கினர்.
இடம் மாறிய சிறு, பெரு குடல்களையும் சரி செய்தனர். இதனால் குழந்தை நலம் பெற்று வீடு திரும்பியது. அரிய பல சிகிச்சைகளையும் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் வழங்குவதால் எளிய மக்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும், என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE