ஈரோடு: சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், தர்ணாவில் நேற்று ஈடுபட்டனர். ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில், கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் லூர்து பெலிக்ஸ் ஸ்டீபன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக துணை பொதுசெயலாளர் கணேசன், கோரிக்கைகளை விளக்கி பேசினார். கடந்த, 2016 சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். உயர்கல்வி பயில பின்னேற்பு அனுமதி கோரிய, 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்களுக்கு, அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE