தலைவாசல்: தக்காளி வரத்து அதிகரிப்பால், அதன் விலை பாதியாக சரிந்ததால், விவசாயிகள் பரிதவித்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில், தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அங்கு விளையும் தக்காளியை, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில், விவசாயிகள் விற்கின்றனர். அப்பகுதிகளில், தொடர் மழையால், விளைச்சல் அதிகரித்து, மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன், 4 டன்னாக இருந்த, உள்ளூர் வரத்து, தற்போது, 6 டன்னாக அதிகரித்துள்ளது. பெங்களூரு, கோலார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும், 13 முதல், 15 டன் வரை தக்காளி வரத்து உள்ளது. இதனால், அதன் விலை சரிந்துள்ளது. நேற்று, தக்காளி ஒரு பெட்டி(30 கிலோ), 240 முதல், 300 ரூபாய் வரையும், கிலோ, 8 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரம் தக்காளி பெட்டி, 450 முதல், 550 ரூபாய், கிலோ, 15 முதல், 18 ரூபாய் வரை விற்றது. வரத்து அதிகரிப்பால், ஒரு வாரத்தில், தக்காளி விலை பாதியாக சரிந்துள்ளது. இதுகுறித்து, தலைவாசல் விவசாயிகள் கூறுகையில், 'வரத்து அதிகரிப்பால், வெளியூர் வியாபாரிகள், விலையை குறைத்து கொடுக்கின்றனர். ஆனால், அறுவடை கூலி, விளைச்சல் செலவு, போக்குவரத்து ஆகியவற்றை கணக்கிட்டால், லாபமே இல்லை' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE