திருப்பூர்:திருப்பூர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளாக, தினமும் சராசரியாக, 3000 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தினமும், 15 முதல், 20 பிரசவங்கள் வரை நடக்கின்றன.மருத்துவமனையில் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் சிலர், பிறப்பு முதல் இறப்பு வரை, லஞ்சம் வாங்குகின்றனர். குறிப்பாக, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுகிறது. பிரசவ வார்டிலும், பிணவறையிலும் கட்டாய வசூல் நடக்கிறது. பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஒரு தொகையும், பெண் குழந்தை பிறந்தால் ஒரு தொகையும் நிர்ணயித்து லஞ்சம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக ஒப்பந்த ஊழியர் ஒருவர், லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்ட நிலையில், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.மருத்துவ கல்லுாரி டீன் வள்ளி கூறுகையில், ''லஞ்சம் வாங்குவது குறித்து எவரேனும் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, மெமோ, பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். லஞ்சம் வாங்குவதை தடுக்க, வார்டுகள் தோறும், புகார் தெரிவிக்கும் எண்ணை குறிப்பிட்டு, அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE