புவனேஸ்வர்: ஒடிசாவில், பள்ளிக்கு தாமதமாக செல்வதாக மாணவர் வெளியிட்ட, 'டுவிட்டர்' பதிவால், அரசு பஸ் நேரத்தை, மாநில அரசு அதிரடியாக மாற்றியது.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பள்ளி மாணவர், சாய் அன்வேஷ் அம்ருதன். இவர், லிங்கிப்பூரில் இருந்து வரும் அரசு பஸ்சில், பள்ளிக்கு சென்று வந்தார். அந்த பஸ் புறப்படும் நேரம் திடீரென மாற்றப்பட்டதால், மாணவர் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.
தன் பிரச்னை குறித்து மாணவர் சாய், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். அதில், 'என் பள்ளியில், வகுப்புகள் காலை, 7:30 மணிக்கு துவங்குகிறது. வழக்கமாக நான் செல்லும் பஸ், லிங்கிப்பூரில் புறப்படும் நேரத்தை காலை, 7:40 ஆக மாற்றியுள்ளனர். 'இதனால், பள்ளிக்கு தாமதமாக செல்வதால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன' எனக் கூறி இருந்தார்.

மாணவரின் பதிவிற்கு, நுாற்றுக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்ததுடன், அவரது கோரிக்கையை பரிசீலிக்கும்படி பதிவிட்டனர்.இந்நிலையில், மாணவரின் கோரிக்கையை ஏற்று, சம்பந்தப்பட்ட பஸ் புறப்படும் நேரத்தை மாற்றும்படி, மாநில அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அந்த பஸ்சின் நேரத்தை, போக்கு வரத்து கழகம் மாற்றி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE