இடைப்பாடி: அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குவிந்தனர். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, முதன்முறையாக தை பொங்கலை முன்னிட்டு வேட்டி, சேலை அத்துடன், 2 கிலோ பச்சரிசி, 1 கிலோ சிறு பருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், 1 கிலோ வெல்லம், 5 கிராம் ஏலக்காய், 25 கிராம் முந்திரி, 25 கிராம் திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இடைப்பாடி பகுதியில், 6,614 பேர் கட்டுமான வாரியத்தில் தொழிலாளர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு, இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று தொழிலாளர் துறை இணை ஆணையர் ரமேஷ், உதவி ஆணையர் முத்து, ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி துவக்கி வைத்தனர். தொழிலாளர்துறை மண்டல பொறுப்பாளர் மஞ்சுநாதன், உதவி ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க, 1,500க்கும் மேற்பட்ட ஆண், பெண் கட்டுமான தொழிலாளர்கள் குவிந்ததால், பொருட்களை கொடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். பின்னர், கூடுதல் பணியாளர்களை நியமித்து, பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE