ஓசூர்: ஓசூர், அரசு மருத்துவமனையில், நேற்று மாலை, ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண், சில மணி நேரத்தில் உயிரிழந்தார். மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம்சாட்டி, அவரது உறவினர்கள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர் அடுத்த, தொடுதேப்பள்ளியை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி பவித்ரா, 21; நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், கடந்த, 3ல், ஓசூர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தம் குறைவாக இருந்ததால், டாக்டர்கள் பரிந்துரைப்படி அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. நேற்று மாலை, 4:10 மணிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்த நிலையில், மாலை, 6:45 மணிக்கு, பவித்ரா திடீரென உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். டாக்டர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால், அவர் இறந்ததாக கூறி, அவரது உறவினர்கள் நேற்றிரவு, 9:00 மணிக்கு, மருத்துவமனையில் திரண்டனர். அவர்களிடம், மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் பூபதி, டி.எஸ்.பி., முரளி பேச்சுவார்த்தை நடத்தினர். இதே மருத்துவமனையில், கடந்த மாதம், 30ல், ஒசபுரத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி, 26, என்பவருக்கு, குழந்தை வயிற்றிலேயே இறந்ததாக கூறி, குழந்தையின் உடலில் இருந்து தலையை மட்டும், தனியாக துண்டித்து வெளியே எடுத்ததாக, ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், மீண்டும் மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE