ஓசூர்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்டம் ஓசூரில் நடந்தது. மாநில தலைவர் குமரேசன் தலைமை வகித்து, சங்கக்கொடியை ஏற்றி வைத்தார். இதில், கிருஷ்ணகிரி டி.ஆர்.ஓ., சதீஷ், ஆர்.டி.ஓ.,க்கள் குணசேகரன், கற்பகவள்ளி ஆகியோர் பேசினர். கூட்டத்தில், அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையுள்ள அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படை நியமனதாரர்களின் பணியை, ஒரே அரசாணையில் வரன்முறை செய்ய வேண்டும் என்பன உட்பட, 10 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 18ல், அனைத்து மாவட்டங்களில் பிரசார இயக்கம் நடத்துவது. 19ல், அனைத்து மாவட்டத்திலும் கலெக்டர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது. வரும், 27ல், தமிழகம் முழுவதுமுள்ள, 12 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல்விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவது. பிப்., 6ல், சேலம் மாநகரில், 10 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கும் பேரணி மற்றும் மாநாட்டை நடத்துவது. பிப்., 17 முதல், தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநில பொதுச்செயலாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE