சென்னை : புதிய அரசு மருத்துவ கல்லுாரிகளின் கட்டுமான பணிகளை வேகப்படுத்தும் நடவடிக்கைகளை, பொதுப்பணித்துறை துவக்கியுள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், நாகை, கிருஷ்ணகிரி, அரியலுார், கள்ளக்குறிச்சி ஆகிய, 11 மாவட்டங்களில், புதிதாக அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனைகள் துவங்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.ஒவ்வொரு மருத்துவ கல்லுாரிக்கும் கட்டடம் கட்ட, முதற்கட்டமாக, 325 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. அதனால், கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
புதிய மருத்துவ கல்லுாரிகளில், வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, கட்டுமான பணிகளை வேகப்படுத்த, பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இதையடுத்து, கட்டுமான பணிகளை வேகப்படுத்துவதற்கான ஆய்வை, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.கட்டுமான பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க, ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மே மாதத்திற்குள் பணிகள் முடிந்தவுடன், இங்கு தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின், மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என, தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE