நாமக்கல்: கேரள மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளது. கோழி பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிவிரைவு குழுவினர், ஒவ்வொரு பண்ணையாக சென்று உயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதுதவிர, ரத்த மாதிரிகளும் எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு, கோழி மற்றும் முட்டைகள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மூலம், பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், வட மாநிலங்களில் இந்த நோய் கிருமிகள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் பறவைகள், மூலம் பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கோழிப்பண்ணையாளர்கள் எக்காரணம் கொண்டும், வேறு பறவைகளை பண்ணைக்குள் விடக் கூடாது. குறிப்பாக, இந்த பறவைகள் கோழி எருவில் உள்ள புழுக்களை சாப்பிட வருகின்றன. எனவே, பண்ணைகளில் கோழி எருக்கள் அதிக அளவில் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். வன பகுதிகளில் பறவைகள் இறந்து கிடந்தால், கால்நடை பராமரிப்புத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE